அயோத்தி வழக்கு: இன்று மீண்டும் விசாரணை

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
அயோத்தி வழக்கு: இன்று மீண்டும் விசாரணை


அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்தர் குழு தங்கள் இடைக்கால அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து அளித்துள்ள நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 8-ஆம் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம். இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை உச்சநீதிமன்றம்  நியமித்தது. ஆன்மிக குருவும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றனர். இக்குழு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரிடமும் பேச்சு நடத்தி, தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மே 6-ஆம் தேதி தாக்கல் செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் அயோத்தி வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, மத்தியஸ்தர் குழு எந்தவிதமான அறிக்கை அளித்துள்ளது என்பது தெரியவருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தி பிரச்னைக்கு சுமூகதீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகள் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு,  இது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. நிலம் தொடர்பான பிரச்னை என்றால், எளிதில் தீர்ப்பு வழங்கிவிடலாம். ஆனால், ஹிந்து-முஸ்லிம் மதத்தினரிடையே சுமுகமான உறவை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்புகிறது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்துவதற்காக மத்தியஸ்தர் குழுவை நியமிக்கிறோம் என்று கூறி முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் கடந்த மார்ச் மாதம் மத்தியஸ்தர் குழுவை நியமித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com