கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் மேற்கொண்ட மக்கள் நலப் பணிகள் என்ன என்று பிரதமர் மோடியிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தில்லியில் முட்டுக்கட்டை அரசியல் நடைபெறுகிறது என்று ஆம் ஆத்மி அரசை கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்நிலையில், பிரதமரின் பேச்சுக்குப் பதிலளிக்கும் வகையில், கேஜரிவால் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் கல்வி, சுகாதாரம், மின்சாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தியுள்ளோம். இதேபோல, கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் செய்த மக்கள் நலப் பணிகளைப் பட்டியல் இட முடியுமா? உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டுப் பயணங்கள், பேச்சுகளைத் தவிர வேறு எதையும் மோடி செய்யவில்லை. அதனால்தான் போலியான தேசியவாதம் பேசி இப்போது வாக்குசேகரிக்கும் நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார். தில்லியில் சீலிங் நடவடிக்கையை நிறுத்த மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவராதது ஏன்? 2014 மக்களவைத் தேர்தலில் தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மோடி உறுதியளித்தார். அது வழங்கப்படாதது ஏன்? மீண்டும் பிரதமராக மோடி தேர்வாக வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரும்பம் தெரிவித்துள்ளது ஏன்? இந்த மூன்று கேள்விகளை தில்லி மக்கள் கேட்கின்றனர். அதற்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.