மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து அவதூறான பிரசாரத்தை முன்னெடுப்பது கோழைத்தனத்தின் உச்சம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ராஜீவ் காந்தியை மோடி இதுவரை இருமுறை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, உங்கள் தந்தையை (ராஜீவ் காந்தி) அவரால் அமைக்கப்பட்ட நீதிமன்றம் வேண்டுமானால் குற்றமற்றவர் என்று கூறலாம். ஆனால், உண்மையில் அவர், ஊழலில் முதலிடம் பெற்றவர் என்ற பெயருடன்தான் மரணமடைந்தார் என்று பேசினார்.
இதற்கு பதிலளித்த ராகுல், உங்கள் கர்மா உங்களுக்காகக் காத்திருக்கிறது. எனது தந்தை குறித்து நீங்கள் எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அது உங்களுக்கு ஒருபோதும் கைகொடுக்காது. எனது ஆழ்ந்த அன்பும், அரவணைப்பும் உங்களுக்கு உண்டு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது இத்தாலிய உறவினர்களை விடுமுறைக்கு அழைத்துச் செல்வதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பலைப் பயன்படுத்தினார் என்று குற்றம்சாட்டினார். இது காங்கிரஸார் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் சுட்டுரையில் (டுவிட்டர்) வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், நாட்டுக்காகப் பணியாற்றி உயிர்நீத்த உயர்ந்த தலைவர் ராஜீவ் காந்தி. அவர் இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகு அவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. அதற்கு பதிலளிக்க அவர் உயிருடன் இல்லை என்பதும் குற்றச்சாட்டுகளுக்கு முக்கியக் காரணம். அவர் மீது தொடர்ந்து அவதூறு பரப்புவது கோழைத்தனத்தின் உச்சம்.
அவர் படுகொலை செய்யப்படுவதற்கு யார் காரணம்? பாஜக ஆதரித்து வந்த அப்போதைய பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான அரசு, ராஜீவ் காந்திக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க மறுத்தது.
ராஜீவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று பலமுறை உளவுத்துறை எச்சரித்தபோதும், அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.