அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலின் கூட்டாளி டேவிட் நிஜெல் ஜான் சிம்ஸ் நேரில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள துணை குற்றப்பத்திரிகையில் ஜான் சிம்ஸின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகி, இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட், ஃபின்மெக்கானிகா நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்கள், துபையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் சக்úஸனாவின் மனைவி ஷிவானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் துபையில் இருந்து கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர், அமலாக்கத் துறை விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.