மக்களவைக்கான 6-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மேற்கு வங்கம், பிகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலும், தேசியத் தலைநகர் தில்லியிலும் உள்ள இந்த தொகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஏற்கெனவே 5 கட்ட வாக்குப்பதிவுகள் (ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6) நடைபெற்று முடிந்த நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 12) நடைபெற உள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்: தற்போது 6-ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில், கடந்த முறை பாஜக 45, திரிணமூல் காங்கிரஸ் 8, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும், சமாஜவாதி, லோக்ஜன சக்தி ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.