அலகாபாத் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் இந்த ஒரு வீட்டுக்குச் சென்று வாக்கு சேகரிக்க தவறவே மாட்டார்கள். ஏன் அவ்வளவு ராசியான வீடா என்று கேட்காதீர்கள்?
இந்த ஒரு வீட்டில் அதாவது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 82 பேரில் 66 பேர் வாக்காளர்கள். இவர்கள் அனைவரும் வேளாண்மையை தொழிலாகச் செய்கிறார்கள். இரண்டு பேர் மட்டும் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.
பஹ்ரைச்சா கிராமத்தைச் சேர்ந்த ராம் நரேஷ் புர்டியா(98) தனது குடும்பத்தைப் பற்றி பெருமையோடு சொல்லும் விஷயம் என்னவென்றால் அனைவருமே இதுவரை ஒரே ஒரு சமையலறையைத்தான் பயன்படுத்துகிறோம் என்பதுதான்.
ஒவ்வொரு நாளும் 20 கிலோ காய்கறி, 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை என சமையலுக்குப் பயன்படுத்துவதாகவும், சமையல் பணிகளை பெண்கள் கவனித்துக் கொள்வதாகவும் கூறுகிறார்.
என் குடும்பத்தில் இருந்து ஒருவர் கூட இதுவரை தனியாக வாழ வேண்டும் என்று விரும்பியது இல்லை. எங்களை அனைவரும் உதாரணமாக எடுத்துக் கொண்டு நாட்டு மக்கள் அனைவருமே ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என நாட்டு மக்களுக்கும் இவர் கருத்து சொல்கிறார்.
வரும் திங்களன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவின் போது இந்த குடும்பத்தைச் சேர்ந்த 8 முதல்முறை வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். எனது கொள்ளுப் பேரன் பேத்திகள் 8 பேரும் வாக்களிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்கிறார் ராம் நரேஷ்.
நாங்கள் அனைவருமே மதிய நேரத்தில் ஒன்றாக சென்று வாக்களிப்போம். நாங்கள் வாக்களிக்கச் செல்லும் போது தேர்தல் அதிகாரிகள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வாக்களிக்க வழிவகை செய்வார்கள்.
மண் சுவர், மேற்கூரை கொண்ட வீட்டில் வசிக்கும் இந்த குடும்பத்தினர் இந்திய தேசத்துக்கே ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.