தில்லியில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பிறகும் நமோ டிவியில் தேர்தல் தொடர்பான நிகழ்வுகளை ஒளிபரப்புவதாக தில்லி பாஜகவுக்கு தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 1.43 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இதன்மூலம், தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. இதன்மூலம், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை தேர்தல் பிரசார தடை காலம் அங்கு அமலில் உள்ளது.
இந்த நிலையில், தில்லியில் தேர்தல் பிரசார தடை காலத்திலும் நமோ டிவியில் தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதாக தெரிகிறது. இதனால், தில்லி பாஜகவுக்கு தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு தில்லி பாஜக சனிக்கிழமை மாலைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.