ஐடிசி குழுமங்களின் தலைவர் ஒய்.சி. தேவேஸ்வர்(72) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
1968 ஆம் ஆண்டு ஐடிசி குழுமத்தில் பணியில் சேர்ந்த தேவேஸ்வர், 1984ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார். 1996 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஐடிசி குழுமத்தின் புதிய தலைவராக பதவியேற்றார்.
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை முதன்மையாக கொண்டது ஐடிசி குழுமத்தை, ஆசிர்வாத் கோதுமை மாவு, சன்ஃபீஸ்ட் பிஸ்கெட், சிப்ஸ், நூடுல்ஸ், விவெல் சோப்புக்கட்டிகள், மங்கள்தீப் ஊதுபத்திகள், கிளாஸ்மேட் நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வகை நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்யும் எப்எம்சிஜி நிறுவனமாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் தேவேஸ்வர்.
அவரது பணிக் காலத்தில் ஐடிசி குழுமம் குறிப்பிடத்தகுந்த அளவு வளர்ச்சி பெற்றதில் முக்கிய பங்காற்றியவர் தேவேஸ்வர்.
தேவேஸ்வரின் பணிகளைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கிச் சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
ஐடிசி குழும தலைவர் தேவேஸ்வரின் மறைவுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.