தெலங்கானாவில் ஆளும் ராஷ்ட்ரிய சமிதியின் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் தரப்பில் பொதுத் தேர்வு விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தலைவர்களான வி.ஹனுமந்த ராவ் மற்றும் நாகேஷ் முதிராஜ் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தீடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் விழுந்து புரண்டு தாக்கிக்கொண்டு சண்டையிட்டனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே மிகவும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
வி.ஹனுமந்த ராவ், நாகேஷ் முதிராஜ் இடையிலான இந்த மோதல் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற எதிர்கட்சிகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே சண்டையிட்டுக்கொண்ட சம்பவம் மக்களிடையே கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.