அஸ்ஸாம் மாநிலம், ஹைலகண்டி நகரில் வெள்ளிக்கிழமை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த மோதலில் காயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் 15 வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், 12 கடைகளை சூறையாடினர்.
இதுதொடர்பாக ஹைலகண்டி காவல்துறை துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி கூறியதாவது: இரு வேறு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்ததால், பாதுகாப்புக்காக ராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலுக்கு முன்பு சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டனர். பள்ளிவாசலுக்கு முன்பு அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மோதல், வன்முறையாக மாறி, கலவரமாக வெடித்தது.
இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.