கட்டல்: மேற்கு வங்கத்தில் வாக்குச் சாவடியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான பா.ஜ.க. பெண் வேட்பாளர் ஒருவர் திரிணமூல் தொண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நிகழந்துள்ளது.
ஆறாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் ஞாயிறன்று நடக்கிறது. இந்த தேர்தலில் மேற்கு வங்காளத்தின் கட்டல் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக பாரதி கோஷ் என்பவர் போட்டியிடுகிறார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் முன்னர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக இருந்தவர்.
இந்நிலையில் இவர் ஞாயிறன்று தனது ஏஜெண்டுடன் அவரது தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி ஒன்றிற்கு காலை சென்றார். ஆனால் அவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெண் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு அவர் உள்ளே நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையடுத்து வேறொரு வாக்கு மையத்திற்கு நுழைய முயன்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பியது. அவரைச் சூழ்ந்து கொண்ட சிலரால் அடித்து தரையில் தள்ளப்பட்டார். இதனால் அவர் அங்கிருந்து அழுது கொண்டே வெளியேறினார்.
வாக்குச் சாவடிக்குள் அவர் தனது மொபைல் போனுடன் உள்ளே சென்று, அங்கு விடியோ பதிவு செய்ய முயன்றார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்பாக தேர்தல் தொடர்பான தகராறுகளில் பா.ஜ.க. தொண்டர் ஒருவர் சனி இரவு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அதேபோல இரண்டு பா.ஜ.க. தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர்.