தில்லியிலிருந்து புவனேசுவரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த "ராஜதானி' விரைவு ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தால், பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: தில்லியிலிருந்து புவனேசுவரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த "ராஜதானி' விரைவு ரயிலில், நண்பகல் 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
ஒடிஸாவில் உள்ள பாலாசோர் மற்றும் சோரோ ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. ரயிலுக்கு மின்சாரம் வழங்குவதற்காக, மின்சார பேட்டரிகள் பொருத்தப்பட்டிருந்த பெட்டியில் இத்தீவிபத்து ஏற்பட்டது. பயணிகளின் பெட்டிகளுக்கு தீ பரவவில்லை.
இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைத்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்ட பெட்டியிலிருந்து, மற்ற பயணிகள் பெட்டிகள் துண்டிக்கப்பட்டன. மேலும், மின்சார வயர்களின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பிற்பகல் 3 மணியளவில் ரயில் மீண்டும் பயணிக்கத் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.