"நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று நான் கூறியதாக வெளியான தகவல்கள் பொய்யானவை' என்று நடிகை ஷபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
அரசை எதிர்த்து கேள்வி கேட்பதாலும், விமர்சனங்களை துணிச்சலுடன் முன்வைப்பதாலும் அடிக்கடி கவனம் ஈர்ப்பவர் நடிகை ஷபானா ஆஸ்மி. இவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறிவிடுவேன் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. அப்படியொரு எண்ணமும் எனக்கு இல்லை. நான் பிறந்த இதே மண்ணில்தான் உயிர் துறப்பேன்.
நான் கூறியதாக பொய்யான செய்தி வெளியாகி இருப்பது கண்டிக்கத்தக்கது. என்னைப் பற்றி பொய்யான செய்தியை வெளியிடுவோரின் நிலை பரிதாபத்துக்குரியதாக உள்ளது. விவாதிப்பதற்கும், பேசுவதற்கும் வேறு எந்த விஷயமும் இல்லாததால், மக்கள் உண்மையென்று நம்பவேண்டும் என்பதற்காக தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அவர்களின் மிதமிஞ்சிய வேகம், அவர்கள் தோல்வி பயத்துடன் இருப்பதை காட்டுகிறது. இதனால், அவர்கள் தலைகுப்புற தரையில் விழுவார்கள். எதிரணியினரை எதிரிகளாக நடத்தக் கூடாது என்று எனது தந்தை கைஃபி ஆஸ்மி எனக்கு கூறியிருக்கிறார் என்றார் அவர்.