6-ஆவது கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு 63.3%

மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
6-ஆவது கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு 63.3%

மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை
மக்களவைக்கு 6-ஆவது கட்டமாக 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 63.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
 மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
 மக்களவையில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 5 கட்டத் தேர்தல்கள் ஏற்கெனவே முடிந்து விட்டன.
 இந்நிலையில், 6-ஆவது கட்டமாக உத்தரப் பிரதேசம் (14), ஹரியாணா (10), பிகார் (8), மத்தியப் பிரதேசம் (8), மேற்கு வங்கம் (8), தில்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது.
 இந்தத் தேர்தலில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 979 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
 இவர்களில் மத்திய அமைச்சர்கள் மேனகா காந்தி, ராதா மோகன் சிங், நரேந்திர சிங் தோமர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, ஷீலா தீட்சித் உள்ளிட்டோர் முக்கிய பிரமுகர்கள் ஆவர்.
 குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உள்ளிட்டோர் தில்லியில் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
 தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன், முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு தில்லி பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மாக்கன், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
 மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் வாக்களித்தார்.
 இவரை எதிர்த்து போபால் தொகுதியில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங், இத்தேர்தலில் வாக்களிக்கவில்லை. ராஜ்கர் நகரில் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. போபாலில் இருந்து 140 கி.மீ. தொலைவில் ராஜ்கர் உள்ளது.
 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங், போபால் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
 சில இடங்களில் வன்முறை: மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இருப்பினும் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களித்தனர்.
 இந்த மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கிய முதல் 4 மணி நேரத்தில் 37 சதவீத வாக்குகள் பதிவாகின.
 "கேஷ்பூரில் சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்' என்று மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அலுவலகம் தெரிவித்தது.
 பாஜக பெண் வேட்பாளர் பாரதி கோஷ் சென்ற வாகனம் மீது வெடி குண்டு வீசியும், கற்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. மர்ம நபர்களை போலீஸார் விரட்டி அடித்தனர்.
 பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் அந்த மாநிலத் தலைவருமான திலீப் கோஷும் வாக்குச் சாவடிக்கு செல்ல முயன்றபோது பிரச்னைகளை எதிர்கொண்டார்.
 ஹரியாணா மாநிலம், சோனிபட் தொகுதியில் போட்டியிடும் ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் திக்விஜய் சௌதாலா, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் சரியாகத் தெரியவில்லை என்று புகார் தெரிவித்தார்.
 மத்தியப் பிரதேசத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
 தொழில்நுட்பக் கோளாறுகள்: உத்தரப் பிரதேசத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
 இதையடுத்து, அவற்றை மாற்றியதாக அந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
 பிகார் மாநிலம், ஷியோஹர் மக்களவைத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரியை துணை ராணுவப் படை வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. பிகாரிலும் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன. அவை சரிசெய்யப்பட்ட பின்னர், வாக்குப் பதிவு தொடங்கியது.
 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 வாக்குப்பதிவு சதவீதம்
 புது தில்லி 60.21%
 உத்தரப் பிரதேசம் 54.24%
 மத்தியப் பிரதேசம் 64.00%
 மேற்கு வங்கம் 84.95%
 ஜார்க்கண்ட் 64.50%
 ஹரியாணா 69.50%
 பிகார் 60.00%
 ரயில் நிலையம்போல் மாறிய வாக்குச்சாவடி!
 பிகாரில் முசாஃபர்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியை ரயில் நிலையம் போல் வண்ணம்பூசி மாற்றி, அதில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரயில் நிலையம் போல் மாற்றியமைத்தது, பள்ளி மாணவர்களுக்கும் புதுவித அனுபவத்தை அளிக்கும். இளைஞர்களையும் இதுபோன்ற வடிவமைப்பு வாக்குச் சாவடியை நோக்கி ஈர்க்கும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com