புது தில்லி: அரசியல் சுயலாபத்துக்காக தனது மனைவியையே கைவிட்டுவிட்டார் என்று பிரதமர் மோடியை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமரிசித்திருப்பதற்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி பற்றி தனிப்பட்ட வகையில் விமரிசித்திருப்பதன் மூலம், மாயாவதி, அரசியல்வாழ்க்கைக்கு தகுதியானவர் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டிவிட்டர் பக்கத்தில் இன்று தனது தொடர்ச்சியான டிவீட்டுகளால் எதிர்க்கட்சித் தலைவர்களை போட்டு வாட்டி வதக்கியிருக்கும் அருண் ஜேட்லி, தனது சொந்த மாநிலத்தில் ஜனநாயகத்தைக் கொன்று குவிக்கிறார் என்று மம்தா பானர்ஜியையும் காட்டமாக விமரிசித்துள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, தனது அரசியல் சுயலாபத்துக்காக தனது மனைவியையே கைவிட்டுவிட்ட நபர், எப்படி நாட்டில் உள்ள பெண்களை மதிப்பார் என்று எதிர்பார்க்க முடியும் என கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.