ஒடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் படைப்பிரிவு முகாம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கலஹண்டி மாவட்டம், திரிலோசன்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.
இதையடுத்து அந்த முகாமில் இருந்து சில மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள அம்பகுடா சௌக் பகுதியில் 2ஆவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திலும் யாரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை.
குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. ஒடிஸாவில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் திரிலோசன்பூரும் ஒன்று. இதனால் மாவோயிஸ்டுகளே இரட்டை குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.