ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியானில் பாதுகாப்புப் படையினருடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோபியான் மாவட்டம், ஹென்ட் சிதாபூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.
நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில், 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்கள் அருகே பாதுகாப்புப் படையினர் சென்று பார்த்தபோது, ஏராளமான ஆயுதங்கள் கிடந்தன. அந்த ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் 2 பேரும், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜாவீத் அகமது பட், அடில் பஷீர் வானி என்பதும், அவர்களுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.