கேரளத்தில் கோயில் திருவிழாக்கள் அனைத்துக்கும் முதன்மையாகக் கருதப்படும் திருச்சூர் பூரம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சூரில் உள்ள பழைமை வாய்ந்த வடக்குந்நாதன் கோயிலில் பூரம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா, பாரம்பரிய சடங்குகளுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
கோயில் மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆரவாரத்துடன், கோயிலின் தெற்கு நுழைவுவாயிலை மாநிலத்திலேயே உயரமான யானையான "தெச்சிக்கோட்டுக்காவு ராமசந்திரன்' யானை திறந்து வைத்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பூரம் திருவிழா திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
முன்னதாக, 10.5 அடி உயரம் கொண்ட தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் யானை, கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. 54 வயது நிரம்பிய அந்த யானை, கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பூரம் திருவிழாவில் முதன்மையாகப் பங்கேற்று வருகிறது.