மோடியின் தேர்தல் பிரசாரத்துக்காக நீதி ஆயோக் தரும் தகவல்களை பிரதமர் அலுவலகம் பயன்படுத்துகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதில் தேர்தல் நெறிமுறை மீறல் ஏதுமில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
தில்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு கடந்த 1-ஆம் தேதி நேரில் சென்று புகார் கடிதத்தை அளித்தது. அதில், "மோடி பிரசாரம் செய்யும் மாவட்டங்களின் கலாசார பின்னணி உள்ளிட்ட விவரங்களை நீதி ஆயோக் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் மூலம் பிரதமர் அலுவலகம் பெற்று வருகிறது. இந்த விவரங்கள் மோடியின் தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படுகின்றன. இது அரசு இயந்திரத்தை தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் செயலாகும். மேலும், இது அப்பட்டமான தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்' என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீதி ஆயோகிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலளித்த நீதி ஆயோக், அரசியல் தொடர்பான எந்தத் தகவலையும் பிரதமர் அலுவலகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
மாவட்ட அளவிலான தகவல்கள் வழக்கமாக பிரதமர் அலுவலகத்துடன் நீதி ஆயோக்கிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம்தான் என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, காங்கிரஸ் அளித்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.