லக்னௌ: ஆர்.எஸ்.எஸ்ஸே கைவிட்ட மூழ்கும் கப்பல்தான் பாஜக அரசு என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆறு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தலைவர்கள் இடையேயான சொற்போர் உச்சத்தை அடைந்து வருகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி மற்றும் எதிர்கட்சித் தலைவர்களுக்கு இடையே தொடர்ந்து வார்த்தை மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்ஸே கைவிட்ட மூழ்கும் கப்பல்தான் பாஜக அரசு என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரான மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செவ்வாயன்று அவர் ஹிந்தியில் தொடர்ந்து பதிவிட்டுள்ள கருத்துக்களாவது:
பிரதமர் மோடியின் அரசு ஒரு மூழ்கும் கப்பல். ஆர்.எஸ்.எஸ்ஸே அதைக் கைவிட்டிருப்பதே இதற்கு சிறந்த சாட்சி.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் பொதுமக்கள் மத்தியில் நிலவும் ஆத்திரத்தின் காரணமாக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தில் எங்குமே காணப்படுவதில்லை. இதன் காரணமாக மோடி மிகுந்த பதற்றமாக இருக்கிறார்.
நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாட்டை ஆளக்கூடிய ஒரு தூய்மையான பிரதமரே இப்போதைய தேவை.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.