கேரளத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்காக அனுப்பி வைக்கப்பட்ட தபால் வாக்குகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதால் விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: கேரளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களின் தபால் வாக்குகளை காவல்துறை அலுவலக சங்கத்தைச் சேர்ந்த சிலர் அரசுத்துறையின் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி திருத்தம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, கூடுதல் காவல்துறை தலைவரிடம் (புலனாய்வு பிரிவு), புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், காவல்துறை அலுவலக சங்கத்தை சேர்ந்தவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளை மிரட்டியும், அச்சுறுத்தியும் அவர்களது தபால் வாக்குகளை பெற்று அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, கூடுதல் காவல்துறை தலைவரும், உரிய விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார் என்று மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே,தபால் வாக்குகளில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.