கட்சித் தொண்டர்களை சந்திப்பதற்காக பிரியங்கா காந்தி தடுப்புகளைத் தாண்டிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரியங்கா காந்தி பங்கேற்றார். பிரியங்கா காந்தியின் வருகையால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பிரியங்கா காந்தியை கண்டதும் அங்கு திரண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இதைக்கண்ட பிரியங்கா காந்தி தொண்டர்களை சந்திப்பதற்காக தடுப்புகளைத் தாண்டி குதித்துச் சென்றார்.
பின்னர் அவர்களுடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.