நாட்டுக்கு மோடியால் மிகப் பெரும் ஆபத்து: மம்தா பானர்ஜி
நாட்டுக்கு பிரதமர் மோடியால் மிகப் பெரும் ஆபத்து என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் 24 பர்கனாஸ் மாவட்டத்தின் பிர்லாபூர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது: மாநிலத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடையே கலவரத்தை ஏற்படுத்தி, பிரிவினைக்கு வழிவகுக்க பாஜக முயன்று வருகிறது. அதற்காக, அவர்கள் எதையும் செய்வார்கள். ஆனால், நான் அவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டேன். பாஜகவின் முயற்சிகளைத் தடுக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன்.
மாநிலத்திலுள்ள முஸ்லிம் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் நான் நடந்துகொள்வதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர். முதலில் திருப்திப்படுத்துதல் என்றால் என்ன? முஸ்லிம் மக்களும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தானே? அவர்களுக்கான உரிமைகளை நான் செய்துகொடுக்கிறேன். இதிலென்ன தவறு? இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து, கீழ்த்தரமான அரசியலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. டைமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எனது உறவினர் குறித்து பாஜக தவறான கருத்துகளைப் பரப்பி வருகிறது. அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவரே. அவரது விருப்பம் காரணமாக அவர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனால் என்ன தவறு? என்றார் அவர்.
ஒரு வாக்கு கூட செலுத்தாதீர்கள்: மேற்கு வங்க மாநிலத்தின் நம்கானா பகுதியில் நடைபெற்ற மற்றொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
நாட்டிலுள்ள சிறுபான்மையினர் மீதும், பழங்குடியினர் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் பாஜக அரசு தாக்குதல் நடத்தியது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை. அவரை மீண்டும் பிரதமராக நீங்கள் (மக்கள்) தேர்ந்தெடுத்தால், நாட்டை அவர் அழித்துவிடுவார். நாட்டுக்கு மிகப் பெரும் ஆபத்தாக அவர் விளங்கி வருகிறார். எனவே, ஒரு வாக்கு கூட செலுத்தாமல் அவரைத் தோற்கடிக்க வேண்டும். பாஜகவைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றார் அவர்.