மக்களை எதிர்கொள்ள முடியாததால்தான், பஞ்சாபில் 7-ஆம் கட்டத் தேர்தலின் போது நவஜோத் சிங் சித்து பிரசாரத்தில் ஈடுபடவில்லை என்று சிரோமணி அகாலி தளத்தின் செய்தித் தொடர்பாளரும் தில்லி எம்எல்ஏவுமான மன்ஜீந்தர் சிங் சிர்சா விமர்சித்தார்.
இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பஞ்சாப் மக்களுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்ரீந்தர் சிங், மன்பிரீத் சிங் பாதல், நவஜோத் சிங் சித்து ஆகியோர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகள் எதையும் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
இதனால், தற்போது மக்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், பஞ்சாபில் 7-ஆம் கட்டத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியுள்ளார். பஞ்சாபில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டால், அவரை மக்கள் கேள்வி கேட்பார்கள். இதனால், அவர் பிரசாரத்தைத் தவிர்த்து வருகிறார்.
பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் கட்சியும் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்கும் மாநில மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை. பஞ்சாப் மக்கள் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார் அவர்.