முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். அவரது 6 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 14-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், அம்மாநிலத்தில் இருந்து இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் ஜூன் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆனால், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால் மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்கான போதிய பலம் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.
அதனால், மன்மோகன் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்தால் அக்கட்சி சற்று காத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சிலர் இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுள் யாரேனும் வெற்றி பெற்ற பிறகு காலியாகும் அவர்களது இடங்களில் ஏதேனும் ஒன்றை மன்மோகன் சிங்குக்கு ஒதுக்கவேண்டும்.
பிறகு மன்மோகன் சிங்கை தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகள் ஜூலை மாதம் காலியாகின்றன. இதில் திமுக விரும்பினால் மன்மோகன் சிங்குக்கு ஒரு இடத்தை ஒதுக்கலாம்.
இல்லையெனில், பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் 2020 ஏப்ரலில் தான் காலியாகிறது. அதனால், மன்மோகன் சிங் அதுவரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.