இலங்கை ஈஸ்டர் தின தற்கொலை தாக்குதல் தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த அடில் அமீஷ் (24) என்ற மென்பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சந்தேகத்தின் பேரில் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சுமார் 3 ஆண்டுகளாக கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்களிலும், 3 நட்சத்திர விடுதிகளிலும் சக்தி வாய்ந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; சுமார் 500 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நிகழ்ந்த 4 நாள்களில் சந்தேகத்தின்பேரில் அமீஷை இலங்கை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் தற்கொலைப் படை பயங்கரவாதிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், வெடிப்பொருள்களை கொண்டு வரும் உதவிகளையும் அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமீஷுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை கடந்த 3 ஆண்டுகளாக இந்திய உளவுத் துறையினர் கண்காணித்து வந்தது இப்போது தெரியவந்துள்ளது. அவரது, இ-மெயில் உள்ளிட்ட இணைய தொடர்புகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டுள்ளது. அமீஷை கைது செய்ததை இலங்கை அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இலங்கையில் குண்டு வெடிப்புக்குப் பிறகு பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், அவர் வழக்குரைஞர் உதவியை நாடவும் வழியில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.