பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த 2017-ஆம் ஆண்டில் தாம் கூறி, சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து தற்போது சரியாகிவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரைசிங் காஷ்மீர், தி பிரின்ட், இதழ்களில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவை பிரதமர் நரேந்திர மோடி பழித்துப் பேசுவதன் காரணம் இப்போது புரிகிறது.
இயற்கை அறிவியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டம் பெற்றவரான நேரு, அதன் காரணமாக இந்தியாவையும், இந்தியர்களையும் மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபட செய்ய பாடுபட்டார். ஆனால், பிரதமர் மோடியோ, விநாயகரின் உடலில் யானையின் தலை அறுவை சிகிச்சை மூலம் இணைக்கப்பட்டதாக பேசினார்.
தற்போது, அடர்ந்த மேகத்துக்கு அப்பால் இந்திய போர் விமானங்களை பாகிஸ்தானின் ரேடார் கருவிகளால் பார்க்க முடியாது என்று விமானப் படை தளபதியிடம் அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். இது, விமானப் படையையும், குறிப்பாக அதன் தளபதியையும் அவமதிக்கும் பேச்சாகும். இதுபோன்ற பேச்சுகளுக்காக பிரதமர் மோடி எச்சரிக்கப்பட வேண்டும்.
இந்தியா இதுவரை கண்ட பிரதமர்களில், மோடியைப் போல் தரம் தாழ்ந்து பேசியவர் எவருமில்லை. அவர் வரும் 23-ஆம் தேதி மக்களால் அகற்றப்படுவார்.
இந்த நேரத்தில், நான் பிரதமர் மோடியைப் பற்றி கடந்த 2017-ஆம் ஆண்டு சொன்னது நினைவுக்கு வருகிறது. இதன் மூலம், பின்னாள் நடப்பதை முன்னரே அறிந்து கூறும் சக்தி எனக்கு உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று அந்தக் கட்டுரையில் மணி சங்கர் ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி கீழ்த்தரமானவர் என்று மணி சங்கர் ஐயர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்தச் நிலையில், தனது அந்தக் கருத்தை நியாயப்படுத்தும் வகையில் தற்போது மணி சங்கர் கூறியுள்ளது மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.