ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் வகைப்படுத்தி, அவற்றை முழுமையாக துறை ரீதியில் ஆய்வுக்குள்படுத்தி, உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டுள்ள கேள்வி ஒன்றுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்டிஐ)ஆர்வலர் அனில் கல்காலி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் திருட்டு போனதாகவும், இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அளிக்குமாறு கோரியிருந்தார்.
மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தில் இருந்து, ரஃபேல் ஆவணங்கள் திருட்டு போனதாக கூறப்படுவது உண்மை தானா? அவ்வாறு திருட்டு போயிருந்தால் அதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது போன்ற தகவல்களை அளிக்குமாறு கோரியிருந்தார்.
இக்கடிதத்துக்கு விமானப்படை துணைச் செயலர் மற்றும் விமானப்படை சிபிஐஓ அதிகாரி சுஷீல் குமார், அளித்துள்ள பதிலில், ரஃபேல் விவகாரம் தொடர்பாக துறை ரீதியில் ஆய்வு நடத்தி, விசாரணை அறிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மே 7ஆம் தேதி சுஷீல்குமார் அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவுப்படி, ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் வகைப்படுத்தி, அவற்றை முழுமையாக துறை ரீதியில் ஆய்வுக்குள்படுத்தி, உண்மைத்தன்மையை பொது அதிகார வரம்புக்குள்பட்டு வெளிக்கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் அனில் கல்காலி கூறுகையில்: இந்த விவகாரம் தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள் துணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஏனெனில், அரசுத் தரப்பில் கோரப்பட்ட முழுமையான தகவல்கள் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பான, அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் அறிந்துக்கொள்ளும் வகையில் முழுமையாக வெளியிட வேண்டும் என்றார்.