காங்கிரஸ் கட்சியின் 'நியாய் திட்டம்' வறுமையை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வு கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மாவ் நகரில், கோசி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அதுல் ராயை ஆதரித்து பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் வறுமையை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வு அல்ல என்று அவர் விமரிசித்தார்.
இதுதொடர்பாக, அவர் பேசுகையில்,
"வாக்காளர்களை கவர்வதற்காக குறிப்பாக ஏழை மக்களை கவர்வதற்காக, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது வறுமையை ஒழிப்பதற்கான நிரந்தர தீர்வு அல்ல.
மத்தியில் ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், ஏழை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் நிரந்தர வேலை வழங்கப்படும்" என்றார்.
17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதான அறிவிப்பாக இருப்பது 'நியாய் திட்டம்' தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 72,000 வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.