நாதுராம் கோட்சே தேச பக்தர் என்றால், மகாத்மா காந்தி தேச விரோதியா என்று சாத்வி பிரக்யாவின் கருத்தை விமரிசித்து ஒமர் அப்துல்லா டிவீட் செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே" என்று கமல்ஹாசன் பேசியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இதுதொடர்பாக, போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரிடம் இன்று (வியாழக்கிழமை) கேள்வி எழுப்பியபோது, "நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார். இப்போதும் தேச பக்தராக இருக்கிறார். இனியும் தேச பக்தராகத்தான் இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறுபவர்கள், தங்களைத் தாங்களே விமரிசித்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு தேர்தல் முடிவுகள் தகுந்த பாடத்தினைக் கற்றுத் தரும்" என்று பதிலளித்தார்.
இவருடைய இந்த கருத்தும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதை விமரிசிக்கும் வகையில், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பெயரை குறிப்பிடாமல் டிவீட் செய்துள்ளார். அதில், மகாத்மா காந்தியை கொலை செய்தவர் தேச பக்தர் என்றால் மகாத்மா காந்தி என்ன தேச விரோதியா என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.