பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, விங் கமாண்டர் அபிநந்தனை 40 மணிநேரம் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப் படையின் மிராஜ் போர் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இதற்கு பதில் தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் விமானப் படை எஃப்-16 ரக விமானங்கள் மூலம் இந்திய ராணுவ முகாம்கள் மீது குண்டுவீச முயற்சித்தன.
இதையடுத்து, இந்தியத் தரப்பு மிக்-21 விமானங்கள் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. அப்போது, விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அப்போது, அவரது விமானமும் தாக்குதலுக்கு உள்ளானது. பாகிஸ்தான் பகுதியில் பாராசூட் மூலம் குதித்த அவரை, அந்நாட்டு ராணுவம் பிடித்தது. எனினும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடியை அடுத்து அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது.
இக்கட்டான சூழ்நிலையில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டு பாகிஸ்தான் விமானத்தை சுட்டுவீழ்த்தியதுடன், பாகிஸ்தானில் பிடிபட்டபோதும் வீரத்துடன் செயல்பட்ட அபிநந்தனை பிரதமர் மோடி உள்பட தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, விங் கமாண்டர் அபிநந்தனை 40 மணிநேரம் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்த 58 மணிநேரத்தில் 40 மணிநேரம் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக, இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடியில் இருந்த 5 மணிநேரத்தில் அபிநந்தனிடம் முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து ராவல்பிண்டிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு விசாரணை நடத்தியுள்ளது.
அப்போது இருட்டு அறையில் அடைக்கப்பட்டு அதிக ஒலியுடன் சப்தம் எழுப்பி ஒவ்வொரு அரை மணிநேரத்துக்கும் ஒருமுறை ஒருவர் உள்ளே சென்று கடுமையாகத் தாக்கி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அபிநந்தன் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை இங்கு சிகிச்சை அளிக்கும்போது அபிநந்தனே பகிர்ந்துகொண்டதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.