கங்கையின் புதல்வனாய் 2014-ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, ரஃபேல் தரகராய் வெளியேறுவார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சித்து கூறியதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தரகுத் தொகை பெற்றீர்களா? இல்லையா? என்பதை மட்டுமே நரேந்திர மோடியிடம் கேட்க விரும்புகிறேன். இதுதொடர்பாக இந்நாட்டில் அவர் என்னுடன் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்தலாம். இதில் நான் தோற்றுப்போனால் அரசியலை விட்டே வெளியேறிவிடுகிறேன்.
2014-ஆம் ஆண்டு கங்கையின் புதல்வனாய் நரேந்திர மோடி வந்தார். ஆனால், 2019-ல் ரஃபேல் தரகராய் வெளியேறுவார். காங்கிரஸ் தலைவர் ராகுல் மிகவும் சக்திவாய்ந்தவர். அவர் பீரங்கி என்றால் நான் ஏகே-47 என்று பேசினார்.
வழக்கம்போல் சித்துவின் இந்தப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.