வாரணசி: தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த நபரைக் காப்பாற்ற, ட்ரக்கில் இருந்து பிரியங்கா காந்தி குதித்து உதவிய சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதிக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவர் தற்போது விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக அவர் தற்போது வாரணசியில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
அங்கு புதன்கிழமை மாலை நடைபெற்ற ஒரு பேரணியில் அவர் பங்கேற்று ட்ரக் ஒன்றில் இருந்தபடியே பேசி வந்தார். அப்போது கூட்டத்தில் ஒருவர் மயங்கி கீழே விழுந்ததைப் பார்த்த அவர், உடனடியாக ட்ரக்கில் இருந்து குதித்து இறங்கினார். விரைந்து அவர் அருகே சென்ற பிரியங்கா, நெஞ்சு வலிப்பதாகக் கூறிய அந்த நபருக்குத் தன கையில் இருந்த நீரைக் கொடுத்து உதவினார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த தனது பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கார் ஒன்றை ஏற்பாடு செய்த பிரியங்கா, அந்நபரை அருகிலிருந்த மருத்துவமனை ஒன்றில் சேர்க்குமாறு கூறிவிட்டு தனது பிரசாரப் பயணத்தைக் தொடந்தார்.
இதேபோல சில நாட்களுக்கு முன்பாக மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவரை, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற பிரியங்கா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.