ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் தலித் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
கணவர் முன்பே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தலித் பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது வீட்டுக்குச் வியாழக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அப்போது ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் அவினாஷ் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது,
அல்வார் சம்பவம் குறித்து அறிந்தவுடன், நான் அஷோக் கெலாட்டை தொடர்பு கொண்டு கேட்டறிந்தேன். இது அரசியல் விவகாரமல்ல. இதனால் பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளேன். இதற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.