மும்பை: இதைக் கூட எடுத்துக் கொண்டு போகக் கூடாதா? என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு, பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல் புதன்கிழமையன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தன்னுடன் இசைக் கருவி ஒன்றை கையில் எடுத்துச் செல்வதற்கு விமான நிறுவனத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தனது வருத்தத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது ஓர் இசைக்கலைஞரோ அல்லது எவர் ஒருவரோ, தனது விலைமதிப்பற்ற இசைக்கருவியை தன்னுடன் எடுத்துக்கொண்டு தங்களது விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என்று விரும்புவதாக யூகிக்கிறேன். நல்லது. நன்றி. பாடத்தை உணர்ந்து கொண்டேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவிற்குப் பிறகு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது தனதுஅதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ஷ்ரேயா கோஷலிடம் மன்னிப்புக் கோரி இருந்தது. அது தெரிவித்ததாவது:
ஹை ஷ்ரேயா, இதைக் கேட்பதற்கு வருந்துகிறோம். உங்களது பிரச்னை குறித்து கூடுதல் தகவல்களை அறிய விரும்புகிறோம். கடைசியாக எங்கள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து உங்களுக்கு என்ன சொல்லப்பட்டது? நன்றி!
இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.