காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரியாவை ஆதரித்து உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கன்ஜில் பிரியங்கா காந்தி இன்று (வியாழக்கிழமை) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
"உங்களுடைய 56 இன்ச் மார்பு குறித்து தற்பெருமை பேசுனீர்களே, உங்களுக்கு எங்கு இதயம் இருக்கிறது?
தேசியவாதம் குறித்து பேசும் போது பிரதமர் பாகிஸ்தானை இழுப்பார். அவரைப் பொறுத்தவரை தேசியவாதம் என்பது பாகிஸ்தானுக்கு பதிலடி தந்தது குறித்து பேசுவது மட்டும் தான். வேலைவாய்ப்பும், விவசாயப் பிரச்னைகளும் அவருக்கு தேசியவாதம் கிடையாது.
கடந்த 5 ஆண்டுகளில் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்தார். ஆனால், சொந்த நாட்டில் உள்ள விவசாயிகளை பார்க்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. ஆனால், இந்த திட்டம் விவசாயிகளை இழிவுபடுத்தும் செயலாகும். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு வெறும் 2 ரூபாய் தான் கிடைக்கும். அதேசமயம், நியாய் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழை குடும்பங்களுக்கும் ஆண்டுதோறும் ரூ. 72,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்புகள் சீர்குலைக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் 24 லட்ச இடங்கள் காலியாக உள்ளது. அதேசமயம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை காங்கிரஸ் நிச்சயம் நிரப்பும்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாள் வேலைத் திட்டம், 150 நாட்களாக நீட்டிக்கப்படும். தொழிலாளர்களுக்கும் ஊதியம் சரியாக வழங்கப்படும்" என்றார்.