மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான அர்ஜுன் சிங்கின் மனைவி சரோஜ் குமாரி புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 84. தில்லி அருகே நொய்டாவில் உள்ள வீட்டில் புதன்கிழமை அதிகாலை தூங்கி கொண்டிருந்த அவர் எழுந்திருக்கவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில், மருத்துவர்கள் வந்து சரோஜ் குமாரியின் உடலை பரிசோதித்தனர். இதில் அவரது உயிர், தூக்கத்திலேயே பிரிந்திருப்பது தெரிந்தது.
வயோதிகம் காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவு பிரச்னைக்கு, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 6 வாரங்களாக சரோஜ் குமாரி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 25ஆம் தேதிதான், வீட்டுக்கு திரும்பியிருந்தார்.
அவரது இறுதிச்சடங்கு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊரில் நடைபெறவிருக்கிறது.
நொய்டாவில் உள்ள மகள் வீனா சிங்கின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சரோஜ் குமாரி வசித்து வந்தார். இதுகுறித்து வீனா சிங் கூறுகையில், மத்தியப் பிரதேசத்துக்கு எனது தாயாரின் உடலை கொண்டு செல்வதற்காக, எனது சகோதரர்கள் 2 பேரும் தில்லிக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றார்.