அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில வாரங்களில் ஏற்பட்ட புயல், மின்னல் ஆகிய இயற்கை பேரிடர்களில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அஸ்ஸாமில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட புயல், மின்னலால், மாநிலம் முழுவதும் சுமார் 18 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோலாகாட், சிவசாகர், துப்ரி, சச்சார் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 22, 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்படைந்துள்ளனர். புயலில் சிக்கி 10 பேரும், மின்னல் தாக்கி 13 பேரும் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு..: புயல், மின்னல் ஆகிய இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ. 4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் உண்டான சேதங்களைச் சீரமைக்க உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமன்றி, முழுவதும் சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க சுமார் ரூ. 1 லட்சமும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளைச் சீரமைக்க சுமார் ரூ. 5, 000 வழங்குமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.