குஜராத் மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தது, பாஜக வரலாற்றில் மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றிலும் கரும்புள்ளியாக உள்ளது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் செய்தியாளர்களிடம் மாயாவதி புதன்கிழமை கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் எனது ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு, கலவரங்கள், வன்முறை எதுவும் நடைபெறவில்லை. எனது ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகள் குறித்து மக்கள் இன்றும் நினைத்து பார்க்கின்றனர். ஆனால், குஜராத் முதல்வராக மோடி ஆட்சிசெய்தபோது என்ன நடந்தது? மக்களிடையே வகுப்புவாத கலவரம் அதிக அளவில் ஏற்பட்டது. முதல்வராக இருந்தபோது மட்டுமல்லாது இப்போது பிரதமர் பதவியில் இருக்கும்போதும், அவரது ஆட்சியில் அராஜகமும், வன்முறைகளுமே நிகழ்கின்றன.
மக்களிடையே பிரிவினையையும், வெறுப்புணர்வையும் மோடி வளர்த்து வருகிறார். நமது நாட்டின் கலாசாரம், அரசமைப்புச் சட்டத்தின்படி, ராஜ தர்மத்தை மோடி பின்பற்றவில்லை. முதல்வராக பதவி வகிப்பதற்கே தகுதி இல்லாத நபர், பிரதமராக உள்ளார்.
பாஜகவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களை நேர்மையானவர்களாக காட்டிக் கொள்ள முயல்கின்றனர். ஆனால் உண்மையில், அவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள். மோடி தன்மீதுள்ள புகார்கள் அனைத்தையும் மறைத்து வெளியில் நல்லவராக காட்டிக் கொள்கிறார்.
பாஜக கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டிலேயே நடைபெற்ற மிகப்பெரிய ஊழல். அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.