வறட்சி நிவாரணப் பணிகளில் மெத்தனமாகச் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார்.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், வறட்சி நிவாரணப் பணிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் குமாரசாமி ஆலோசனை நடத்த முடியவில்லை. இந் நிலையில், வறட்சி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்கு வசதியாக தேர்தல் நடத்தை விதிகளைத் தளர்த்த வேண்டுமென்று தேர்தல் ஆணையத்துக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருந்தது.அதன்பேரில், வறட்சி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து, பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் புதன்கிழமை சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தார்வாட், கலபுர்கி மாவட்டங்கள் நீங்கலாக இதர 28 மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஊராட்சி தலைமைச் செயல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்தினார்.
அப்போது முதல்வர் குமாரசாமி பேசியது: தற்போது மக்களுக்கு குடிநீர், கால்நடைகளுக்கு தீவனங்களை வழங்குவது அவசியமாகும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கடமையைச் சரியாக செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான கூடுதல் நிதியை ஒதுக்க அரசு தயாராக உள்ளது. வேலை தேடி வெளியூர்களுக்கு மக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலைகளை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு தாமதித்து வந்தாலும், மாநில அரசு ரூ.1,200 கோடி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மாநில அரசுக்கு வர வேண்டும். வறட்சி நிவாரணப் பணிகள் குறித்து தினமும் தகவல் அளிக்க வேண்டும் என்றார்.