ஹைதராபாத் நிதி நிறுவன மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

ஹீரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் நவ்ஹீரா சேக் உள்பட 3 பேரை அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.


ஹீரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்நிறுவனத்தின் தலைவர் நவ்ஹீரா சேக் உள்பட 3 பேரை அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இயங்கி வந்த ஹீரா நிதி நிறுவனத்தில், ஆந்திரம், தெலங்கானா, கேரளத்தைச் சேர்ந்த மக்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில், முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு உரிய பணத்தை வழங்காது மோசடியில் ஈடுபட்டதாக, அந்நிறுவனத்தின் மீது முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். 
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வழக்கு தொடர்பாக, ஹீரா குழுமத்தின் தலைவரும், அகில இந்திய மகளிர் முன்னேற்றக் கட்சியின் தலைவருமான நவ்ஹீரா சேக், அவரது உதவியாளர் மாலி தாமஸ், ஹீரா குழுமத்துக்கு உதவிய மென்பொருள் நிறுவனத் தலைவர் பிஜு தாமஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரம் குறித்து  தனியே வழக்குப்பதிவு செய்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சிறையில் உள்ள மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு  ஹைதராபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அனுமதி கோரியிருந்தது.  அதை விசாரித்த நீதிமன்றம், 3 பேரையும் கைது செய்து 7 நாள் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹைதராபாதில் இயங்கி வந்த ஹீரா நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்தால், அசல் மட்டுமன்றி லாபம் பன்மடங்கு அதிகமாக கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தியுள்ளது. இதை நம்பி  1, 70,000-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். சுமார் ரூ. 3, 000 கோடிக்கும் அதிகமான பணத்தை மக்கள் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், அசல், லாபம் இரண்டையும் தராது அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக மக்களிடமிருந்து அதிக அளவில் புகார்கள் வந்தன. 
விசாரணையில், ஹீரா நிறுவனம் மக்கள் முதலீடு செய்த பணத்தை எந்த தொழிலும் முதலீடு செய்யவில்லை என்பதும், அந்த நிறுவனத்தை நடத்தி வந்த நவ்ஹீரா சேக், அவரது உதவியாளர் மாலி தாமஸ், நிதி நிறுவனத்துக்கு உதவி செய்து வந்த மென்பொருள் நிறுவனத் தலைவர் பிஜு தாமஸ் ஆகியோர், மக்கள் முதலீடு செய்த பணத்தை தங்களது வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களை விசாரிப்பதற்காக கைது செய்துள்ளோம் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com