ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்ஏ 2-ஆம் ஆண்டு மாணவர் ரிஷி ஜோஷ்வா இன்று (வெள்ளிக்கிழமை) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வேலூரைச் சேர்ந்த ரிஷி ஜோஷ்வா எனும் மாணவர் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பல்கலைக்கழகத்தின் படிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக இணை காவல் ஆணையர் தேவேந்தர் ஆர்யா தெரிவிக்கையில்,
"ஜோஷ்வா தங்கியிருக்கும் விடுதியின் வார்டன் மூலம் சுமார் காலை 11.30 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நூலக கட்டடத்தில் தரை தளத்தில் உள்ள ஒரு அறை, உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அதன்பிறகு ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே நுழைந்து உடல் மீட்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, குற்றப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுதொடர்பாக, ஜோஷ்வாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உறவினர் மேத்யூ வர்கீஸ் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
முதற்கட்ட விசாரணையில், ஜோஷ்வா முன்னதாக, சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர் தனது தற்கொலைக் கடிதத்தை ஆங்கில பேராசிரியருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக, கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
அவரது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.