காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அவந்திபுராவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது காரில் வந்த பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உயிழந்தனர். இந்த சம்பவத்துக்கு ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள அந்த பயங்கரவாத அமைப்பின் முகாம்களைக் குறிவைத்து இந்திய விமானப் படை தாக்குதல் தாக்குதல் நடத்தியது.
இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்க முயன்ற பாகிஸ்தான் போர் விமானங்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீநகர், அவந்திபுராவில் பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், விமானப்படை தளத்திற்கும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு உளவுத் துறை அறிவுறுத்தி உள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்த உளவுத்துறை எச்சரிக்கை முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.