சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல் துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்மீது கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ராஜீவ் குமாருக்கு எதிராக கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என்றும், சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, ராஜீவ் குமாரை கைது செய்ய அனுமதியளிக்குமாறு அண்மையில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க காவல் துறை முன்னாள் ஆணையர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய விதித்த தடை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தவிட்டது. மேலும் 7 நாட்களுக்குள் கைது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம் 7 நாட்களில் உரிய நீதிமன்றத்தை அணுகி ராஜீவ்குமார் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.