திரிபுரா மாநிலம், மேற்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை பலத்த மழை பெய்ததன் காரணமாக வீடுகள் சேதமடைந்தன. சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மொத்தம் 382 வீடுகள் சேதமடைந்ததாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், திரிபுரா தலைமைச் செயலர் எல்.கே.குப்தா, நிலைமையை ஆய்வு செய்து விட்டார். சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மின்சாரம் செல்லும் கம்பிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
திரிபுரா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், நிலைமையை ஆய்வு செய்த முதல்வர் விப்லப் குமார் தேவ், மீட்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.