மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், நாட்டில் அவசரநிலை போன்ற சூழலை பாஜக உருவாக்குவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக சுட்டுரை சமூகவலைதளத்தில் அக்கட்சியின் மகாராஷ்டிர மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மேற்கு வங்கத்தில் வன்முறையில் பாஜக ஈடுபட்டுள்ளது. வரும் நாள்களில் அவசர நிலையை அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தல் வெற்றிக்காக கலவரங்களில் பாஜக இதற்கு முன்பும் ஈடுபட்டுள்ளது. இதற்கு வரலாறே சாட்சி. பாஜக தூண்டுதலால் மேற்கு வங்கத்தில் கலவரம் நடப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பண்டிதர் வித்யாசாகரின் சிலையை பாஜக தொண்டர்கள் சேதப்படுத்தும் காட்சி விடியோவாக எடுக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக பதிலடி: இந்த குற்றச்சாட்டை மகாராஷ்டிர மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யாய மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நாடு முழுவதும் பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. மேற்கு வங்கம் தவிர்த்து எங்கும் வன்முறை நிகழவில்லை. அந்த மாநிலத்தில் நிகழும் வன்முறைக்கு திரிணமூல் காங்கிரúஸ பொறுப்பு. தோல்வி உறுதி என்பதால், திரிணமூல் காங்கிரஸார் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பாஜகவுக்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகம் மீதுதான் பாஜக நம்பிக்கை வைத்துள்ளது என்றார்.