சந்திரபாபு நாயுடு உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோரை இன்று (சனிக்கிழமை) சந்தித்தார்.
ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சிபிஐ தலைவர்கள் ஜி. சுதாகர் ரெட்டி மற்றும் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் லோக் தாந்திரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் ஆகியோரைச் சந்தித்தார்.
வரும் 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதேசமயம், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதியில் முக்கியமான எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
அதனால், இந்த சந்திப்பின்போது சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு விரைந்த சந்திரபாபு நாயுடு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியையும் சந்திரபாபு நாயுடு சந்தித்தார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.
சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே ஒரு சுற்றில் எதிர்க்கட்சித் தலைவர்களான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரையும் சந்தித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்து, பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பணியில் சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அதன்பிறகு, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற விவகாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது. அதன்பிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சென்று சந்தித்தார். பாஜகவை அகற்றுவதற்கான வலுவான கூட்டணியை அமைப்பதில் அவர் அப்போதிலிருந்தே முனைப்பு காட்டி வருகிறார்.
இதனிடையே, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்தார். சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியானது.