புது தில்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், ஹரியாணா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு சொந்தமான தில்லியில் உள்ள ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை முடக்கியது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, ஓம் பிரகாஷ் சௌதாலா, அவரது மகன்கள் அஜய் சௌதாலா, அபய் சௌதாலா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்தது.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிந்துள்ளது.
கடந்த மாதம், ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு சொந்தமான ரூ.3.68 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
தற்போது, புதிதாக ரூ.1.94 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 1993ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை ரூ.6.09 கோடி சொத்துகள் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ஓம் பிரகாஷ் சௌதாலா சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
அஜய் சௌதாலா ரூ.27.74 கோடி சொத்துகளையும், அபய் சௌதாலா ரூ.119 கோடிக்கும் அதிகமான சொத்துகளையும் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்தது.