புது தில்லி: பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல் புகார் குறித்து தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக கூறப்படுவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இது குறித்து விளக்கம் அளித்திருப்பதாவது, தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து மோதல் எழுந்திருப்பதாக வரும் சர்ச்சை தேவையற்றது. எந்த ஒரு விவகாரத்திலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் முடிவும் ஒரே மாதிரியாக இருக்காது. தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம்தான் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.
இதுபோன்று பல்வேறு விவகாரத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன என்றும், கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பானதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான தேர்தல் நடத்தை விதி மீறல்கள் புகார் தொடர்பாக நடந்த கூட்டங்களில் தனது கருத்து ஏற்கப்படாததால் இனி, தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.