கொல்கத்தா: மக்களவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸின் செயல்பாடுகள், மேற்கு வங்கத்தில் பாஜக கால் பதிக்க உதவும் வகையில் உள்ளது; ஆனால், இம்முறை அதிசயிக்கும் வகையில் இடதுசாரிகள் மாபெரும் வெற்றியை பெறும் என கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பாஜகவின் வெற்றிக்கு துணை போவதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும். இது பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களால் திட்டமிடப்பட்டு பரப்பி விடப்படும் பொய்யான தகவல். பாஜகவும், திரிணமூல் காங்கிரஸýம் பொய்யான காரணங்களைக் கூறி, மோதலில் ஈடுபட்டு அதன்மூலம் ஆதாயம் அடைய நினைக்கின்றன. இது முற்றிலும் தவறான செயல்ஆகும்.
இந்த முறை, யாரும் எதிர்பார்க்காத வகையில் மேற்கு வங்கத்தில் அதிசயத்தக்க வெற்றியை இடதுசாரிகள் பெறுவார்கள்.
எங்களது செயல்பாடுகள் கால்பந்து ஜாம்பவான் மெஸ்சியைப் போன்று, எதிராளிகளை கடந்து சென்று இறுதியில் நாங்களே கோல் பதிவு செய்வோம். குறிப்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் எங்களுக்கே கிடைக்கும்.
திரிணமூல் காங்கிரஸார் கடந்த 1998ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், அவர்கள் ஆட்சியில் அமர்ந்ததும், பாஜகவினரை மதவாத சக்திகள் என்றும், இட ஒதுக்கீடுக்கு எதிரானவர்கள் என்றும் இப்போது விமர்சிக்கிறது. தேர்தலில் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்புடனும் வாக்களிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தவும், வாக்குப்பதிவில் முறைகேடுகளில் ஈடுபடாமல் தேர்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.
முன்னதாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறுகையில், கம்யூனிஸ்ட் கட்சியினர், திரிணமூல் காங்கிரஸூடன் போட்டியிட முடியாமல் தங்களது வாக்குகளை பாஜகவிற்கு மாற்றி விடுகின்றனர் என்று கூறியிருந்
தார்.